பயத்தமாவு, பூலாங்கிழங்கு, ரோஸ் இதழ்கள்.. முகப்பொலிவுக்கான ‘ராஜா ராணி’ அர்ச்சனா டிப்ஸ்!
தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது ராஜா ராணி 2-ல் அழகிய வில்லியாக வலம்வந்துகொண்டிருக்கிறார் அர்ச்சனா. சீரான சருமம்கொண்ட இவர் பல பியூட்டி டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.


“சரும பராமரிப்புக்காக நான் அதிகமாக எதுவுமே பண்ணமாட்டேன். நம் சருமத்தை அதிகம் தொந்தரவு செய்யாமல் வீட்டிலிருந்தபடி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே போதும். சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். பராமரிப்புக்காக நான் கண்டிப்பாக உபயோகிக்கும் ஒரு பொருள், சன்ஸ்க்ரீன் லோஷன். அது வீட்டில் இருந்தாலும் சரி வெளியே சென்றாலும் சரி, எப்போதுமே அப்லை செய்துகொள்வேன்.



வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே நம் சருமத்தைப் பராமரிக்க முடியும். முகம் டல்லாக இருந்தால், சிறிதளவு பால் எடுத்து முகத்தில் அப்லை செய்து மசாஜ் செய்தபிறகு கழுவலாம். வறண்ட உதடுகளுக்கு, ஒரு டம்ளர் மோர் போதும். இப்படி சத்தான உணவுகளே போதும். பயத்தமாவு, பூலாங்கிழங்கு, ரோஸ் இதழ்கள், சந்தனம், வேப்பிலை, ஆரஞ்சு தோல் உள்ளிட்டவற்றைக் காய வைத்து, அரைத்து அதனை தினம் பயன்படுத்தி வந்தால், பளபளக்கும் சருமம் நிச்சயம்.


ஷூட்டிங் நேரத்தில் மேக்-அப் போடுவதற்கு முன்பு டோனர் அப்லை செய்து பிறகு வைட்டமின் C சீரம், மாய்ஸ்ச்சரைசர், சன்ஸ்க்ரீன் லோஷன், பிறகு ப்ரைமர் உபயோகிப்பேன். இறுதியாக இலுமினேட்டிங் மிஸ்ட் மூலம் முகத்தை மேலும் பளபளவென மாற்றிவிடுவேன். இது ஷூட்டிங், போட்டோஷூட் இருக்கும் நாள்களில் மட்டும்தான் இந்த வழிமுறை. எனக்கு பொதுவாக மேட் ஃபினிஷிங் பிடிக்காது. இதுபோன்று பளபள சருமம்தான் என்னுடைய சாய்ஸ். இப்படித் தேவைப்படுகிறவர்கள் நான் சொன்னதைப் பின்பற்றினால் நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீர்கள்.


பொதுவாக வைட்டமின் C அதிகமுள்ள உணவுகள் மற்றும் ஸ்கின்கேர் பொருள்களைத் தேர்ந்தெடுத்து உபயோகியுங்கள். அதேபோல குளித்து முடித்ததும் ரோஸ் வாட்டர் மிஸ்ட் முகத்தில் ஸ்ப்ரே செய்வது ஃப்ரெஷ் லுக் கொடுக்கும். இதெல்லாம் மிகவும் எளிதான விஷயங்கள்தான். ஆனால், பலன்கள் அதிகம்”.